Tuesday, 11 December 2012

நொய்யலை பாதுகாக்க என்ன செய்யலாம் ?

காலத்துக்குக் காலம் இயற்கையைப் பார்க்கும் பார்வை மாறி மாறி வந்தாலும், மாற்றம் ஏதுமின்றியே இருக்கிறது இயற்கை!
மனித அறிவு எவ்வளவு குறுகலானது என்பதை வெளிச்சம் போட்டதைத் தவிர நவீன அறிவியல் வேறெதையும் சாதிக்கவில்லை.
--உலகப் புகழ் பெற்ற சப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசாநோ புகொக்கா

நதிக்கரையில் தான் நாகரீகங்கள் தோன்றின, அவ்வாறு தோன்றிய நாகரிகம் உழவுத் தொழிலை முதலில் மேற்கொண்டு உழவின் திசைவழியில் நீண்ட நெடும் பயணத்தை மேற்கொண்டு நவீனம் நோக்கி நகர்ந்தது  என்பது மானுடவியல், அவற்றில் ஒன்று தான் நொய்யல் ஆற்றங்கரை நாகரீகம் இன்று  வரம் கொடுத்தவன் தலையில் கைவைத்து வாழ்வை இழந்து நிற்கிறது  .
வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உருவாகும் நொய்யலாறு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வழியாக கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றில் கலக்கும் இடம் தான் நொய்யல் என்று அழைக்கப்படுகிறது. முன் ஒரு காலத்தில்  கொங்கு நாட்டின் வற்றாத ஜீவ நதியாகவும், விவசாயத்ததை செழிப்பாக்கிய இந்த நொய்யல் நதி இன்று இறந்த நதி என்று அழைக்கப்படுகிறது. காஞ்சிமா நதி என்று அழைக்கப்பட்ட புண்ணிய நதி, இன்று கழிவு நீர்  நதியாக மாறிவிட்டது.

 "இறந்து" கொண்டிருக்கும் நதியை காக்க என்ன செய்யலாம் என்பது நாம் எடுத்துக்கொண்ட கருதுகோள் ஆனாலும் செய்யக் கூடாத எல்லாவற்றையும் செய்தாகி விட்டபடியால் என்ன "செய்யக் கூடாது" என்பதை முன்னிறுத்தியே நமது பயணம் தொடங்குகிறது'' மக்கள், இயற்கையிடமிருந்து தங்களை எவ்வளவு விலக்கிக் கொள்கிறார்களோ... அந்த அளவுக்கு இயற்கையின் மையத்திலிருந்து விலகி விலகிச் செல்கிறார்கள். ஆனால், இயற்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்கிற உந்துதல் மீண்டும் அதிகமாகிறது. 
மனிதர்கள், தப்பான ஒன்றைச் செய்துவிட்டு, அதைச் சரி செய்யாமல் அப்படியே விட்டுவிடுவர். அதன் விளைவுகள் மொத்தமாகத் தாக்கும்போது தனது வலிமை அனைத்தையும் சேர்த்து, வரிந்து கட்டிக்கொண்டு சரி செய்ய முனைவர். அது தான் இன்று நொய்யல் பேரழிவுக்குப் (holocaust) பின்னும் நடந்து கொண்டிருக்கிறது.
இன்று நொய்யலை மீட்டெடுக்க பல யோசனைகள் முன்வைக்கப் படுகின்றன அவற்றில் முதன்மையானதும் அவசரமானதுமானவற்றை மட்டும் பார்ப்போம்.

துவங்கும் முன்பாக, ஆற்றின் எல்லைகள், வெள்ள அளவு, நீர்ப்பிடிப்புப் பகுதிகள், உயிர்ச் சூழல் என எல்லாக் கோணங்களிலும் ஆய்வுகள் செய்து, பின் விளைவுகளை உருவாக்காத வகையில் கவனத்துடன் திட்டமிட்டு, பின்னரே செயல்படத் துவங்கவேண்டும். இப்பணியின் வெளியீடாக துவக்கம் முதல் நிறைவு வரை பட்டாம் பூச்சி விளைவைப் (butterfly effect)  போல தொடர் விளைவை உருவாக்கக் கூடியது. நொய்யலின்  நதி மூலமான மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தே தொடங்குவோம் 

மழை ஈர்ப்பு மையங்களை உருவாக்குதல் 

நொய்யலின் நீராதாரமாக இருக்கும் பல்லுயிர் மண்டலமாம் மேற்குத் தொடர்ச்சி மலையின் காடழிப்புச் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி காடு வளர்ப்பு செயற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் இதன் மூலம் மழை ஈர்ப்பு மையங்கள் உருவாகி நொய்யலின் நீராதார பெருக்கத்துக்கு வழிவகை செய்யும் நடவடிக்கையாக அமையும் . 

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து இறங்கிய நொய்யல் முதலில் நகர "நாகரீகத்தோடு" கலக்கும் இடமாம் பேரூரில் இருந்து கோவை நகரம் வரை பல குளங்களை நிரப்புகிறது இந்தப் பகுதியில்  சாக்கடைக் கழிவுகள், பொதுக் கழிப்பிடக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள்... எனக் கொட்டி வைத்திருக்கிறார்கள். இதனால், குளங்களின்  தன்மை மாறி, மாசடைந்து விட்டது. மேலும் வீட்டுக் கழிவு நீர், ஆலைக் கழிவு நீர், சாயக் கழிவு நீர் என்று பல வகைக் கழிவு நீர்களும்  நேரிடையாக கலப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அவை குழாய்கள் மூலம் ஒருங்கிணைக்கப் பட்டு பலகட்ட வடிக்கட்டல் மற்றும் தூய்மையாக்கல்(filtration and purification )  முறைகளுக்கு உட்படுத்தப் பட்ட பின்னரே வெளிய்ற்றப் பட வேண்டும். 

  1. குமாரசாமி குளம்
  2. செல்வம்பதி குளம் 
  3. கிருஷ்ணாம்பதி குளம் 
  4. நரசம்பதி குளம் 
  5. செட்டிபாளையம் குளம் 
  6. செல்வபுரம் செல்வசிந்தாமணி குளம் 
  7. உக்கடம் வாலாங்குளம் 
  8. கோவை குளம் 
  9. சிங்காநல்லூர் குளம் 
  10. சூலூர் குளம் 
  11. சாமளாபுரம் குளம் 
  12. ஆண்டிபாளையம் குளம் 
  13. ஒரத்துப்பாளையம் அணை 
 மேற்கண்ட இக்குளங்களில் ஆகாயத்தாமரை மற்றும்  சட்டவிரோத குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூய்மையாக்கப்பட்டு,  வழித்தடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும்.
வெட்டி வேர், அசோலா முறைகள் 

வெட்டி வேரானது  மிகச் சிறந்த நச்சு நீக்கியாகப் பயன்படுகிறது.வெட்டி வேர் நச்சுக்களை தன்னகத்தே இழுத்து செரிக்கும் தன்மையுடையதால் 
குளங்களில் இயற்கையான முறையில் சுத்திகரிப்புகளை மேற்கொள்ள  வெட்டி வேர் பயிரிடுவதன் மூலம் படிந்துள்ள நச்சின் அளவை  படிப்படியாக குறைத்து முற்றிலும் இல்லாது செய்யலாம்.

அசோலா முறை 

அசோலா, கடினநீரை மென்னீராக மாற்றும் இயல்புடையது. குளத்தில் போட்ட அசோலாவில் உள்ள 'ரைசோபா’ என்கிற செல், அடியில் சென்று கடினமான தரைப்பகுதியை இலகுவாக்கும் வேலையைச் செய்யும். அடியில் உள்ள நைட்ரேட்டை உடைத்து நைட்ரஜனாகவும், ஆக்சிஜனாகவும் மாற்றும். இதில் அடியில் உள்ள நுண்ணியிரிகளுக்கு நைட்ரஜன் உரமாகும். இதனால், ஆக்சிஜனின் அடர்த்தி அதிகமாகி, தண்ணீரின் தன்மை மாறும். அதேபோல குளத்தில் உள்ள மற்ற கனிமங்களையும் தனது வேர்ப் பகுதியில் அசோலா உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதனால், குளம் மீண்டும் நன்னீர்க் குளமாக மாறும். இதற்கு இரண்டு முதல் மூன்று மாத காலம் பிடிக்கும் பின்னர் குளம் ஓரளவு நல்ல நிலையை அடையும் ஏற்கனவே திண்டுக்கல்லில் தமிழக வேளாண் பல்கலைக்கழ உதவியுடன் பரிச்சார்த்த முறையில் தொடங்கி உள்ளார்கள் வெளிநாடுகளில் இம்முறை பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்டது ஆனாலும் நாம் உடனடியாக இதைத் தொடங்க வேண்டிய நிலை உள்ளது
இந்த முறைகளைப் பயன்படுத்தி "மரண"  அணையாக  வீற்றிருக்கும் "ஓரத்துப் பாளையம்" அணையை உடனடியாக தூய்மைப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும் 

சாய ஆலைத் தொழிலை முறைப்படுத்தல்.

நொய்யல் கரையோராம் புற்றீசல்கள் போல தொடங்கப்பட்ட சாய ஆலைகள் கட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் முழுமையாக நிறுத்தப்படவில்லை.இதை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் .சாய ஆலைகளை ஒரே இடத்தில் செயல்பட வைக்க தொழிற்பேட்டைகளை அமைப்பதன் மூலம் முற்றிலும் முறைப்படுத்த வேண்டும்.சட்டவிரோதமாக சாயமிடுபவர்களின் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும். திருட்டு விசிடி விற்பவர்களின் மேல் கடுமையான சட்டம் பாயும் போது, தொழில் வளர்ச்சி என்று  இயற்கையை சீரழித்து அடுத்த சந்ததியினரை ஒழித்துகட்டும் இவர்களின் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டம் பாய வேண்டும். 

சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நச்சுத்தன்மை இல்லாமல் இருப்பினும்,ஆற்றில் கலப்பதை தடை செய்யவேண்டும். ஒரு சொட்டுக் கழிவு நீர் கூட ஆற்றில் கலக்காமல் குழாய்மூலம்அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் 

தனியார்களாலும் சாலைகள் அமைக்கிறோம், உள்கட்டமைப்புகளை உருவாக்குகிறோம் என்று அரசாங்கங்களாலும்  ஆற்றின் கரையெங்கும் நடக்கும் கொடூரமான ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதற்கு திருப்பூர் நகரத்தில் கடக்கும் ஆற்றின் கரைகளின் அளவே மிகப்பெரும் சான்றாக விளங்குகிறது துவக்கத்தில் 400 அடியாக இருக்கும் கரை வளர்மதிப் பகுதியை அடையும் பொது 250 அடியாகக் குறைந்துள்ளது பின்னர் மேலும் குறைந்து நல்லூர் பகுதியில் வெறும் சிற்றோடையாக குறுகியுள்ளது.இதைப் போர்க்கால அடிப்படையில் சீர்படுத்தி எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகள் நிகழாமல் காக்க வேண்டும் ஆனால் அதே நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்,அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் ஆற்றின் இயல்பிற்கு மாறாக, பாறைகளை அகற்றுதல், ஆழப்படுத்துதல், எல்லைகளை குறுக்குதல் என அதன் போக்கை மாற்ற முயன்றால், வெள்ளம் பெருக்கெடுத்து எதிர்பாராத பகுதியில் பெரும் உயிர்ச்சேதத்தை விளைவிக்கும் இதுபோன்ற பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டியவை.

ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். அதனால் முழு அகலத்துக்கு ஆறு இருக்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்க வேண்டும். வெள்ளம் வரும்போது வளைவுப் பகுதிகளில் அரிப்பு ஏற்படும். எனவே அப்பகுதிகளில் போதுமான அகலம் விட்டு, சாலை அமைக்க வேண்டும். ஆற்றுப்பகுதியில் சாலை அமைக்காமல், கரையில் உள்ள தனியார்களிடம் நிலத்தைப் பெற்று சாலை அமைக்க வேண்டும். அப்போது தான் பொதுப்பணித் துறை நடவடிக்கையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். 

திறந்த வெளிச் சாக்கடைகள் எனும் தீராத தொல்லை  

சாயக் கழிவுகளுக்கு சற்றேறக் குறைய தீமையைத் தரும் நொய்யல் கடந்து வரும் வழியெங்கும் இருக்கும் சிற்றூர்கள், பேரூர்கள்,சிறு, பெரு நகரங்களின்வசிப்பிட கழிவு நீர் (domestic exit) கழிவுகள் நேரிடையாக கலப்பதைத் தடுக்க  திறந்த வெளி சாக்கடைகளை முற்றிலுமாக பாதாள சாக்கடைகளாக மாற்றி அமைப்பதன் மூலம் குப்பைகள் கழிவுகளோடு கலப்பதையும் தடுத்து , அவற்றின் கழிவு நீரை ஒருங்கிணைத்து தூய்மைப் படுத்தி பின்னர் வெளிய்ற்றுமாறு செய்யப்பட வேண்டும். இதனால் நொய்யல் பாதுகாக்கப் படுவதோடு டெங்கு, காலரா போன்ற நோய்களை உருவாக்கும் மூலத்தை அடியோடு தகர்க்க முடியும் குறிப்பாக இன்று தமிழகம் முழுவதிற்குமே பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கும் டெங்கு பேராபத்தை வரும் முன் தவிர்க்க முடியும்

நொய்யல் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மரமாத்து முறை 
நொய்யல் பயணிக்கும் வழியெங்கும் மேற்கண்ட உடனடி சீரமைப்பு நடவடிக்கைகளோடு, இதன் தொடர்சியைப் பேண  பொது மக்கள், அரசு, தன்னார்வ அமைப்புகள் ஆகியோரைக்கொண்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, உறுதியான பொறிமுறைகளை உருவாக்கி நடைமுறைப் படுத்த வேண்டும் 

நொய்யலின் குளங்களின் இன்றைய நிலைக்குக் காரணம் நீர் நிலைகள் மீதான மக்கள் கட்டுப்பாட்டை அன்றைய ஆங்கிலேய அரசு வலுக்கட்டாயமாகப் பறித்து அரசாங்கக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதே, இது நொய்யல் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் காணக் கூடியதாக இருக்கிறது 
எனவே  குளங்களைப் பாதுகாக்க உலகமே வியந்து போற்றிய பண்டைத் தமிழரின் குடிமராமத்து முறையை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்க  வேண்டும்.அதாவது குளங்களை அந்தந்த குளங்கள்  உள்ள ஊரில் உள்ள குழு ஒன்றே பரமாரிக்கும் உரிமையைக் கொண்டு வரவேண்டும் அரசின் தலையீடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு தென் மாவட்டங்களில் இதே லட்சியத்துடனும் தீவிரமாக செயல்படும் திரு வாசிமலை அவர்களை தலைவராகக்  கொண்ட வயலகம் போன்ற அமைப்பின் ஆலோசனைகளையும் சேவைகளையும் உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

தனிமனித விழிப்புணர்வு மற்றும் சுற்றுச் சூழல் கல்வி குறித்த தேவை..
மேற்கூறிய எல்லா முறைகளையும் சேர்த்தும் அதற்கும் மேலாகவும் காலத்தின் தேவையாக இருப்பது தனிமனிதனின் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் அக்கறை. இதை எந்த அரசாங்கத்தாலும் சட்டத்தாலும் உடனாடியாக கொண்டுவரமுடியாது. இதற்குத் தீர்வு பள்ளிகளில் இருக்கிறது.பள்ளிகளில்  சுற்றுச் சூழலை ஒரு கட்டாயப் பாடமாக ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி ஆண்டு வரை  வைக்கவேண்டும் அதன் வழியே பல விழிப்புணர்வு செயல் முறைத் தேர்வுகளை ஒழுங்கமைத்து சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கவும், தொடர்ந்து சூழலைப் பாதுகாக்கவும் பேணவும்  முடியும்,  இது ஒரு இலட்சிய நோக்கத்திற்கான  இலக்கு நோக்கிய பயணம்,துவக்கத்தில் கசக்கும் இறுதியில் இனிக்கும் பெரு நெல்லிக்கனியைப் போன்றே வலி இருப்பினும் முடிவில் வளம் பெருக்கும், வாழ்வு சிறக்கும். எனவே  நாம் அனைவரும் இணைந்தே செயல்படுவோம், இனி வரும் தலைமுறைகளுக்கு இனிய உலகை விட்டுச் செல்வோம் .

நன்றி,
--நொய்யல்  பாதுகாப்பு அமைப்பு, திருப்பூர்.
Save Noyyal River.
facebook.com/noyyal
facebook.com/Save.Noyyal.River