Tuesday, 11 December 2012

நொய்யலை பாதுகாக்க என்ன செய்யலாம் ?

காலத்துக்குக் காலம் இயற்கையைப் பார்க்கும் பார்வை மாறி மாறி வந்தாலும், மாற்றம் ஏதுமின்றியே இருக்கிறது இயற்கை!
மனித அறிவு எவ்வளவு குறுகலானது என்பதை வெளிச்சம் போட்டதைத் தவிர நவீன அறிவியல் வேறெதையும் சாதிக்கவில்லை.
--உலகப் புகழ் பெற்ற சப்பானிய இயற்கை வேளாண் அறிஞர் மசாநோ புகொக்கா

நதிக்கரையில் தான் நாகரீகங்கள் தோன்றின, அவ்வாறு தோன்றிய நாகரிகம் உழவுத் தொழிலை முதலில் மேற்கொண்டு உழவின் திசைவழியில் நீண்ட நெடும் பயணத்தை மேற்கொண்டு நவீனம் நோக்கி நகர்ந்தது  என்பது மானுடவியல், அவற்றில் ஒன்று தான் நொய்யல் ஆற்றங்கரை நாகரீகம் இன்று  வரம் கொடுத்தவன் தலையில் கைவைத்து வாழ்வை இழந்து நிற்கிறது  .
வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உருவாகும் நொய்யலாறு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் வழியாக கரூர் மாவட்டத்தில் காவிரியாற்றில் கலக்கும் இடம் தான் நொய்யல் என்று அழைக்கப்படுகிறது. முன் ஒரு காலத்தில்  கொங்கு நாட்டின் வற்றாத ஜீவ நதியாகவும், விவசாயத்ததை செழிப்பாக்கிய இந்த நொய்யல் நதி இன்று இறந்த நதி என்று அழைக்கப்படுகிறது. காஞ்சிமா நதி என்று அழைக்கப்பட்ட புண்ணிய நதி, இன்று கழிவு நீர்  நதியாக மாறிவிட்டது.

 "இறந்து" கொண்டிருக்கும் நதியை காக்க என்ன செய்யலாம் என்பது நாம் எடுத்துக்கொண்ட கருதுகோள் ஆனாலும் செய்யக் கூடாத எல்லாவற்றையும் செய்தாகி விட்டபடியால் என்ன "செய்யக் கூடாது" என்பதை முன்னிறுத்தியே நமது பயணம் தொடங்குகிறது'' மக்கள், இயற்கையிடமிருந்து தங்களை எவ்வளவு விலக்கிக் கொள்கிறார்களோ... அந்த அளவுக்கு இயற்கையின் மையத்திலிருந்து விலகி விலகிச் செல்கிறார்கள். ஆனால், இயற்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்கிற உந்துதல் மீண்டும் அதிகமாகிறது. 
மனிதர்கள், தப்பான ஒன்றைச் செய்துவிட்டு, அதைச் சரி செய்யாமல் அப்படியே விட்டுவிடுவர். அதன் விளைவுகள் மொத்தமாகத் தாக்கும்போது தனது வலிமை அனைத்தையும் சேர்த்து, வரிந்து கட்டிக்கொண்டு சரி செய்ய முனைவர். அது தான் இன்று நொய்யல் பேரழிவுக்குப் (holocaust) பின்னும் நடந்து கொண்டிருக்கிறது.
இன்று நொய்யலை மீட்டெடுக்க பல யோசனைகள் முன்வைக்கப் படுகின்றன அவற்றில் முதன்மையானதும் அவசரமானதுமானவற்றை மட்டும் பார்ப்போம்.

துவங்கும் முன்பாக, ஆற்றின் எல்லைகள், வெள்ள அளவு, நீர்ப்பிடிப்புப் பகுதிகள், உயிர்ச் சூழல் என எல்லாக் கோணங்களிலும் ஆய்வுகள் செய்து, பின் விளைவுகளை உருவாக்காத வகையில் கவனத்துடன் திட்டமிட்டு, பின்னரே செயல்படத் துவங்கவேண்டும். இப்பணியின் வெளியீடாக துவக்கம் முதல் நிறைவு வரை பட்டாம் பூச்சி விளைவைப் (butterfly effect)  போல தொடர் விளைவை உருவாக்கக் கூடியது. நொய்யலின்  நதி மூலமான மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தே தொடங்குவோம் 

மழை ஈர்ப்பு மையங்களை உருவாக்குதல் 

நொய்யலின் நீராதாரமாக இருக்கும் பல்லுயிர் மண்டலமாம் மேற்குத் தொடர்ச்சி மலையின் காடழிப்புச் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி காடு வளர்ப்பு செயற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் இதன் மூலம் மழை ஈர்ப்பு மையங்கள் உருவாகி நொய்யலின் நீராதார பெருக்கத்துக்கு வழிவகை செய்யும் நடவடிக்கையாக அமையும் . 

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து இறங்கிய நொய்யல் முதலில் நகர "நாகரீகத்தோடு" கலக்கும் இடமாம் பேரூரில் இருந்து கோவை நகரம் வரை பல குளங்களை நிரப்புகிறது இந்தப் பகுதியில்  சாக்கடைக் கழிவுகள், பொதுக் கழிப்பிடக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள்... எனக் கொட்டி வைத்திருக்கிறார்கள். இதனால், குளங்களின்  தன்மை மாறி, மாசடைந்து விட்டது. மேலும் வீட்டுக் கழிவு நீர், ஆலைக் கழிவு நீர், சாயக் கழிவு நீர் என்று பல வகைக் கழிவு நீர்களும்  நேரிடையாக கலப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அவை குழாய்கள் மூலம் ஒருங்கிணைக்கப் பட்டு பலகட்ட வடிக்கட்டல் மற்றும் தூய்மையாக்கல்(filtration and purification )  முறைகளுக்கு உட்படுத்தப் பட்ட பின்னரே வெளிய்ற்றப் பட வேண்டும். 

  1. குமாரசாமி குளம்
  2. செல்வம்பதி குளம் 
  3. கிருஷ்ணாம்பதி குளம் 
  4. நரசம்பதி குளம் 
  5. செட்டிபாளையம் குளம் 
  6. செல்வபுரம் செல்வசிந்தாமணி குளம் 
  7. உக்கடம் வாலாங்குளம் 
  8. கோவை குளம் 
  9. சிங்காநல்லூர் குளம் 
  10. சூலூர் குளம் 
  11. சாமளாபுரம் குளம் 
  12. ஆண்டிபாளையம் குளம் 
  13. ஒரத்துப்பாளையம் அணை 
 மேற்கண்ட இக்குளங்களில் ஆகாயத்தாமரை மற்றும்  சட்டவிரோத குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூய்மையாக்கப்பட்டு,  வழித்தடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும்.
வெட்டி வேர், அசோலா முறைகள் 

வெட்டி வேரானது  மிகச் சிறந்த நச்சு நீக்கியாகப் பயன்படுகிறது.வெட்டி வேர் நச்சுக்களை தன்னகத்தே இழுத்து செரிக்கும் தன்மையுடையதால் 
குளங்களில் இயற்கையான முறையில் சுத்திகரிப்புகளை மேற்கொள்ள  வெட்டி வேர் பயிரிடுவதன் மூலம் படிந்துள்ள நச்சின் அளவை  படிப்படியாக குறைத்து முற்றிலும் இல்லாது செய்யலாம்.

அசோலா முறை 

அசோலா, கடினநீரை மென்னீராக மாற்றும் இயல்புடையது. குளத்தில் போட்ட அசோலாவில் உள்ள 'ரைசோபா’ என்கிற செல், அடியில் சென்று கடினமான தரைப்பகுதியை இலகுவாக்கும் வேலையைச் செய்யும். அடியில் உள்ள நைட்ரேட்டை உடைத்து நைட்ரஜனாகவும், ஆக்சிஜனாகவும் மாற்றும். இதில் அடியில் உள்ள நுண்ணியிரிகளுக்கு நைட்ரஜன் உரமாகும். இதனால், ஆக்சிஜனின் அடர்த்தி அதிகமாகி, தண்ணீரின் தன்மை மாறும். அதேபோல குளத்தில் உள்ள மற்ற கனிமங்களையும் தனது வேர்ப் பகுதியில் அசோலா உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதனால், குளம் மீண்டும் நன்னீர்க் குளமாக மாறும். இதற்கு இரண்டு முதல் மூன்று மாத காலம் பிடிக்கும் பின்னர் குளம் ஓரளவு நல்ல நிலையை அடையும் ஏற்கனவே திண்டுக்கல்லில் தமிழக வேளாண் பல்கலைக்கழ உதவியுடன் பரிச்சார்த்த முறையில் தொடங்கி உள்ளார்கள் வெளிநாடுகளில் இம்முறை பல ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்டது ஆனாலும் நாம் உடனடியாக இதைத் தொடங்க வேண்டிய நிலை உள்ளது
இந்த முறைகளைப் பயன்படுத்தி "மரண"  அணையாக  வீற்றிருக்கும் "ஓரத்துப் பாளையம்" அணையை உடனடியாக தூய்மைப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும் 

சாய ஆலைத் தொழிலை முறைப்படுத்தல்.

நொய்யல் கரையோராம் புற்றீசல்கள் போல தொடங்கப்பட்ட சாய ஆலைகள் கட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும் முழுமையாக நிறுத்தப்படவில்லை.இதை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் .சாய ஆலைகளை ஒரே இடத்தில் செயல்பட வைக்க தொழிற்பேட்டைகளை அமைப்பதன் மூலம் முற்றிலும் முறைப்படுத்த வேண்டும்.சட்டவிரோதமாக சாயமிடுபவர்களின் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும். திருட்டு விசிடி விற்பவர்களின் மேல் கடுமையான சட்டம் பாயும் போது, தொழில் வளர்ச்சி என்று  இயற்கையை சீரழித்து அடுத்த சந்ததியினரை ஒழித்துகட்டும் இவர்களின் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டம் பாய வேண்டும். 

சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நச்சுத்தன்மை இல்லாமல் இருப்பினும்,ஆற்றில் கலப்பதை தடை செய்யவேண்டும். ஒரு சொட்டுக் கழிவு நீர் கூட ஆற்றில் கலக்காமல் குழாய்மூலம்அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் 

தனியார்களாலும் சாலைகள் அமைக்கிறோம், உள்கட்டமைப்புகளை உருவாக்குகிறோம் என்று அரசாங்கங்களாலும்  ஆற்றின் கரையெங்கும் நடக்கும் கொடூரமான ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதற்கு திருப்பூர் நகரத்தில் கடக்கும் ஆற்றின் கரைகளின் அளவே மிகப்பெரும் சான்றாக விளங்குகிறது துவக்கத்தில் 400 அடியாக இருக்கும் கரை வளர்மதிப் பகுதியை அடையும் பொது 250 அடியாகக் குறைந்துள்ளது பின்னர் மேலும் குறைந்து நல்லூர் பகுதியில் வெறும் சிற்றோடையாக குறுகியுள்ளது.இதைப் போர்க்கால அடிப்படையில் சீர்படுத்தி எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகள் நிகழாமல் காக்க வேண்டும் ஆனால் அதே நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம்,அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் ஆற்றின் இயல்பிற்கு மாறாக, பாறைகளை அகற்றுதல், ஆழப்படுத்துதல், எல்லைகளை குறுக்குதல் என அதன் போக்கை மாற்ற முயன்றால், வெள்ளம் பெருக்கெடுத்து எதிர்பாராத பகுதியில் பெரும் உயிர்ச்சேதத்தை விளைவிக்கும் இதுபோன்ற பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டியவை.

ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். அதனால் முழு அகலத்துக்கு ஆறு இருக்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்க வேண்டும். வெள்ளம் வரும்போது வளைவுப் பகுதிகளில் அரிப்பு ஏற்படும். எனவே அப்பகுதிகளில் போதுமான அகலம் விட்டு, சாலை அமைக்க வேண்டும். ஆற்றுப்பகுதியில் சாலை அமைக்காமல், கரையில் உள்ள தனியார்களிடம் நிலத்தைப் பெற்று சாலை அமைக்க வேண்டும். அப்போது தான் பொதுப்பணித் துறை நடவடிக்கையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். 

திறந்த வெளிச் சாக்கடைகள் எனும் தீராத தொல்லை  

சாயக் கழிவுகளுக்கு சற்றேறக் குறைய தீமையைத் தரும் நொய்யல் கடந்து வரும் வழியெங்கும் இருக்கும் சிற்றூர்கள், பேரூர்கள்,சிறு, பெரு நகரங்களின்வசிப்பிட கழிவு நீர் (domestic exit) கழிவுகள் நேரிடையாக கலப்பதைத் தடுக்க  திறந்த வெளி சாக்கடைகளை முற்றிலுமாக பாதாள சாக்கடைகளாக மாற்றி அமைப்பதன் மூலம் குப்பைகள் கழிவுகளோடு கலப்பதையும் தடுத்து , அவற்றின் கழிவு நீரை ஒருங்கிணைத்து தூய்மைப் படுத்தி பின்னர் வெளிய்ற்றுமாறு செய்யப்பட வேண்டும். இதனால் நொய்யல் பாதுகாக்கப் படுவதோடு டெங்கு, காலரா போன்ற நோய்களை உருவாக்கும் மூலத்தை அடியோடு தகர்க்க முடியும் குறிப்பாக இன்று தமிழகம் முழுவதிற்குமே பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கும் டெங்கு பேராபத்தை வரும் முன் தவிர்க்க முடியும்

நொய்யல் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மரமாத்து முறை 
நொய்யல் பயணிக்கும் வழியெங்கும் மேற்கண்ட உடனடி சீரமைப்பு நடவடிக்கைகளோடு, இதன் தொடர்சியைப் பேண  பொது மக்கள், அரசு, தன்னார்வ அமைப்புகள் ஆகியோரைக்கொண்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, உறுதியான பொறிமுறைகளை உருவாக்கி நடைமுறைப் படுத்த வேண்டும் 

நொய்யலின் குளங்களின் இன்றைய நிலைக்குக் காரணம் நீர் நிலைகள் மீதான மக்கள் கட்டுப்பாட்டை அன்றைய ஆங்கிலேய அரசு வலுக்கட்டாயமாகப் பறித்து அரசாங்கக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதே, இது நொய்யல் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் காணக் கூடியதாக இருக்கிறது 
எனவே  குளங்களைப் பாதுகாக்க உலகமே வியந்து போற்றிய பண்டைத் தமிழரின் குடிமராமத்து முறையை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்க  வேண்டும்.அதாவது குளங்களை அந்தந்த குளங்கள்  உள்ள ஊரில் உள்ள குழு ஒன்றே பரமாரிக்கும் உரிமையைக் கொண்டு வரவேண்டும் அரசின் தலையீடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு தென் மாவட்டங்களில் இதே லட்சியத்துடனும் தீவிரமாக செயல்படும் திரு வாசிமலை அவர்களை தலைவராகக்  கொண்ட வயலகம் போன்ற அமைப்பின் ஆலோசனைகளையும் சேவைகளையும் உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். 

தனிமனித விழிப்புணர்வு மற்றும் சுற்றுச் சூழல் கல்வி குறித்த தேவை..
மேற்கூறிய எல்லா முறைகளையும் சேர்த்தும் அதற்கும் மேலாகவும் காலத்தின் தேவையாக இருப்பது தனிமனிதனின் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் அக்கறை. இதை எந்த அரசாங்கத்தாலும் சட்டத்தாலும் உடனாடியாக கொண்டுவரமுடியாது. இதற்குத் தீர்வு பள்ளிகளில் இருக்கிறது.பள்ளிகளில்  சுற்றுச் சூழலை ஒரு கட்டாயப் பாடமாக ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி ஆண்டு வரை  வைக்கவேண்டும் அதன் வழியே பல விழிப்புணர்வு செயல் முறைத் தேர்வுகளை ஒழுங்கமைத்து சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கவும், தொடர்ந்து சூழலைப் பாதுகாக்கவும் பேணவும்  முடியும்,  இது ஒரு இலட்சிய நோக்கத்திற்கான  இலக்கு நோக்கிய பயணம்,துவக்கத்தில் கசக்கும் இறுதியில் இனிக்கும் பெரு நெல்லிக்கனியைப் போன்றே வலி இருப்பினும் முடிவில் வளம் பெருக்கும், வாழ்வு சிறக்கும். எனவே  நாம் அனைவரும் இணைந்தே செயல்படுவோம், இனி வரும் தலைமுறைகளுக்கு இனிய உலகை விட்டுச் செல்வோம் .

நன்றி,
--நொய்யல்  பாதுகாப்பு அமைப்பு, திருப்பூர்.
Save Noyyal River.
facebook.com/noyyal
facebook.com/Save.Noyyal.River

Sunday, 1 April 2012

நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?


நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?





  மீன்கள் துள்ளி விளையாடிட... ஜீவனுள்ள நதியாக விளங்கிய நொய்யல் நதி இன்று சாயக்கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும், நகரத்தின் இன்ன பிற கழிவுகளும், குப்பைக் கூளங்களும் நிரம்பி கழிவுநீர்க் கால்வாயாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மேற்குத்தொடர்ச்சி மலையில் வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உருவாகும் நொய்யலாறு சுமார் 180 கி.மீ., நீண்டு கிடக்கிறது. 32 பெரிய ஏரிகள், நூற்றுக்கணக்கான குளங்களையும் நிரப்பும் இதன் நீர் பிடிப்புப் பகுதிகளின் பரப்பு சுமார் 3.5 லட்சம் ஹெக்டேர். இப்பகுதிகளில் 1970 முதல் 1994 வரை ஆண்டுக்கு சராசரியாக 607.8 மி.மீ., மழை பெய்துள்ளது. வருடத்தில் சராசரியாக 39.4 நாட்கள் மழை பெய்யும் நொய்யலில் வருடம் ஒரு முறையாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக 1974 ஆம் ஆண்டு வந்த பெருவெள்ளத்தில் திருப்பூர் நகரின் மையப்பகுதியே நீரில் மிதந்தது, தற்போதைய மாநகராட்சி அலுவலகம் உள்ள பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. ஈஸ்வரன் கோயில் பாலத்தை சேதப்படுத்திய அந்த வெள்ளம் யுனிவர்சல் தியேட்டரையும் தாண்டி வீடுகளுக்குள்ளும் புகுந்தது. நொய்யலாற்றில் இயற்கையாக அமைந்துள்ள பாறைகள்தான் அந்த வெள்ளப் பெருக்கின் சீற்றத்தை மட்டுப்படுத்தி பேரழிவு ஏற்படாமல் செய்தன.

அமிலத்தன்மை:
வளமான நதியாக ஓடிக் கொண்டிருந்த நொய்யலாறு, கடந்த 20 ஆண்டுகளில் முழுமையாக பாழ்பட்டுள்ளது. புள்ளிவிபரங்களின் படி, திருப்பூரில் ஆண்டுக்கு 1500 டன் சாயக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. கந்தக அமிலம், ஹைட்ரோ குளோரிக் அமிலம், சலவை திரவம், சோடா உப்பு, சோடியம் பெர்ஆக்சைடு மற்றும் வண்ண வேதிப்பொருட்கள் நொய்யலின் அமிலத்தன்மையை அதிகரித்துள்ளன. அத்துடன், மாநகரின் கழிவு நீர், தொழிற்சலைகளின் வேறு பல கழிவுகளும் கலந்து மாசு அளவு அதிகரித்துள்ளது. இதனால் நீரிலுள்ள ஆக்சிஜனின் அளவு 1900 ஆண்டுவாக்கில் இருந்ததைவிட குறைந்து தற்போது ஆறு தன் ஜீவனிழந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 15 ஆண்டுகளில் திருப்பூரின் சுற்றுப்புறச் சூழல் மிக மோசமாக பாதிக்கப்படும்.
நொய்யல் நதிக்கரையில் வசிக்கும் மக்கள், தங்கள் விவசாயத்திற்கும், வாழ்க்கைக்கும் ஆதாரமாக விளங்கிய விலை மதிப்பற்ற இயற்கைச் செல்வத்தை இழந்து தவிக்கிறார்கள். தற்போது அது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நொய்யலைச் சுத்தப்படுத்தி பழைய நிலைக்கு மீட்க வேண்டும் என்பதே இங்குள்ள பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நொய்யல் சீரமைப்பு:

நொய்யல் ஆற்றைச் சீரமைத்து அழகுபடுத்துவோம் என்ற அறிவிப்புடன் தற்போது ”நொய்யல் சீரமைப்பு குழுவினர்” சில பணிகளைச் செய்து வருகிறார்கள். அவர்கள், திருப்பூரின் மையப்பகுதியில் உள்ள ஆற்றின் ஒரு பகுதியை தூர்வாரி சுத்தப்படுத்துவதுடன், போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் ஆற்றோரச் சாலைகள் அமைக்கும் பணியையும் செய்யத் துவங்கியுள்ளனர். மாநகரின் இன்றைய அவசரத் தேவைகளைப் பார்க்கும்போது அவர்கள் பணி வரவேற்புக்குரியதே. ஆனால் நடைமுறையைப் பார்க்கும்போது சில அவசியமான கேள்விகளை எழுகின்றன.

எச்சரிக்கை தேவை:
நதிகள், பேரழகை மட்டுமல்ல, பேரழிவை உண்டாக்கும் சக்தியையும் தன்னுள்ளே கொண்டுள்ளவை. நதி சீரமைப்புப் பணியாற்ற துவங்கும் முன்பாக, ஆற்றின் எல்லைகள், வெள்ள அளவு, நீர்ப்பிடிப்புப் பகுதிகள், உயிர்ச் சூழல் என எல்லாக் கோணங்களிலும் ஆய்வுகள் செய்து, பின் விளைவுகளை உருவாக்காத வகையில் கவனத்துடன் திட்டமிட்டு, பின்னரே செயல்படத் துவங்கவேண்டும். ஆனால், நொய்யல் சீரமைப்புக் குழுவினர் இந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகிறார்களா?.

இதுகுறித்து சுற்றுப்புறச் சூழல் வல்லுநர்களுடன், நொய்யல் சீரமைப்புப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு விபரங்கள் மற்றும் தற்போதைய புகைப்படங்களைப் பார்க்கும்போது நொய்யல் சீரமைப்புக் குழுவினர் மேற்கண்ட தன்மையில் ஆய்வுகள் செய்து வேலைகளைத் துவக்கியதாகத் தெரியவில்லை.

ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகள்:
நொய்யலாற்றின் எல்லைகளை வரையறுக்கப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது பொதுப்பணித் துறையினர் சர்வே பணியைத் துவங்கியுள்ளனர். திருப்பூரின் உட்பகுதியில் காசிபாளையம், பூலவாடி சுகுமார் நகர், அணைக்காடு, மணியகாரம்பாளையம், மின்மயானம் ஆகிய பகுதிகளில் நொய்யலாறு சுமார் 400 அடி அகலம் பரந்துள்ளது. இதில், மணியகாரம்பாளையம் முதல் சுகுமார் நகர் வரை தெற்கு கரையோரத்திலும், சில பகுதிகளில் ஆற்றிற்குள்ளும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதேபோல் வடக்கு கரையில் அணைக்காடு, கருமாரம்பாளையம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளது. காசிபாளையம் சுத்திகரிப்பு நிலையம் உட்பட சில தனியார் கட்டிடங்கள் ஆற்றின் கரையை பெருமளவு ஆக்கிரமித்துள்ளன. வளர்மதி பாலம் உள்ள பகுதியில் மிகக் குறுகலாக சுமார் 250 அடி அகலம் மட்டுமே இருக்கிறது. மேலும், மணியகாரம்பாளையம் மின்நிலையம் எதிர்புறம் ஆற்றில், நல்லுர் நகராட்சி குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறன. இந்த இடத்தில் ஆறு மிகவும் குறுகி ஓடை போல் காட்சிதருகிறது.
குறிப்பாக கஜலட்சுமி தியேட்டர் இருக்கும் இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றங்கரை தியேட்டர் வாசலை ஒட்டினார்போல் இருந்தது. அதற்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைத்தனர். தற்போது அந்த சாலையும் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக மாறி இருக்கிறது. மீண்டும் அங்கே சாலை அமைக்க மேற்கொள்ளும் முயற்சி நொய்யல் ஆற்றை மென்மேலும் குறுக்குவதாக இருக்கிறது.

ஆற்றுக்கு உள்ளே சாலை?
ஆனால், மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அப்படியே விட்டுவிட்டு, கண்ணுக்குத் தெரியும் பகுதிகளில் மட்டும் வேலைகள் நடைபெறுகின்றன. ஒருபடி மேலே சென்று அணைக்காடு பகுதியை ஒட்டிய கரையில் ஆற்றிறுக்கு உள்ளேயே மாநகராட்சி திட்ட சாலை அமைத்தது. அதே பகுதியில் ஆற்றங்கரையில் சமுதாய நலக்கூடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு அப்பணிகளை நிறுத்தியுள்ளன. மேலும், ஆற்றின் பரப்பில் உள்ள இயற்கையான பாறைகள் ”அழகை மேம்படுத்துதல்” எனும் பெயரில் கனரக இயந்திரங்கள் மூலம் உடைத்து இடம் மாற்றப்படுகின்றன. மேலும், ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்த செயல்பாடுகள், திருப்பூரின் மையத்தில் கண்ணுக்கு தெரியும் பகுதிகளில் மட்டும் நொய்யல் ஆற்றை அழகுபடுத்துவதாக உள்ளது. இப்போது நடைபெறும் பணிகள் நொய்யல் நதியை மீட்டு பழைய நிலைக்குக் கொண்டு வரும் அடிப்படை மாற்றத்துக்கு உதவாது.

பேரழிவு அபாயம்:

ஆறுகள் நீரினால் மட்டும் ஆனதல்ல, பாறைகளும், மணலும் ஆற்றின் போக்கை தீர்மானிப்பதில் முதல் பங்கு வகிக்கின்றனர். அனைத்து ஆறுகளுமே வளைந்து நெளிந்து தான் பயணிக்கின்றன, அதுதான் நீரின் போக்கு. ஆற்றின் இயல்பிற்கு மாறாக, பாறைகளை அகற்றுதல், ஆழப்படுத்துதல், எல்லைகளை குறுக்குதல் என அதன் போக்கை மாற்ற முயன்றால், வெள்ளம் பெருக்கெடுத்து எதிர்பாராத பகுதியில் பெரும் உயிர்ச்சேதத்தை விளைவிக்கும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே கணிக்க முடியாத நிலையில், இதுபோன்ற பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியவை.

அறிவியல் ஆய்வு அவசியம்:
கடந்த 50 ஆண்டுகளில் நொய்யல் நதியின் போக்கு குறித்து அறிவியல் அடிப்படையிலான ஆய்வு செய்யவேண்டும். புவி வெப்பமயமாக்கல் குறித்து உலகமே கவலை கொண்டுள்ளது. பல நாடுகள் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பருவ நிலையில் மாற்றம், வெள்ளப் பெருக்கு, வறட்சி, புதிய நோய்கள் உருவாக்கம், உணவு தானிய உற்பத்தி பாதிப்பு என பல்வேறு பிரச்சனைகளைத் தற்போது சந்தித்து வருகின்றது. எனவே நொய்யல் நதியைப் பாதுகாப்பது என்பதும் இதன் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும்.

கரையோர மேம்பாலங்கள்:
போக்குவரத்தை சீரமைக்க நொய்யலின் கரைகளையொட்டி சாலைகள் அவசியமே. ஆனால், இப்போது போல ஆற்றை ஆக்கிரமித்து சாலைகள் அமைப்பது மிக மோசமான விளைவுகளையே தரும். ஆற்றுக்குள் சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
குறிப்பாக இந்த விசயத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தியின் கருத்துக்கள் பொருத்தமானவை. "ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். அதனால் முழு அகலத்துக்கு ஆறு இருக்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்க வேண்டும். வெள்ளம் வரும்போது வளைவுப் பகுதிகளில் அரிப்பு ஏற்படும். எனவே அப்பகுதிகளில் போதுமான அகலம் விட்டு, சாலை அமைக்க வேண்டும். ஆற்றுப்பகுதியில் சாலை அமைக்காமல், கரையில் உள்ள தனியார்களிடம் நிலத்தைப் பெற்று சாலை அமைக்க வேண்டும். அப்போது தான் பொதுப்பணித் துறை நடவடிக்கையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்." 
   

Tuesday, 20 March 2012

நொய்யல் பாதுகாப்பு அமைப்பு இப்பொழுது பதிவுலகில்..


நொய்யல் பாதுகாப்பு அமைப்பு இப்பொழுது பதிவுலகில்..

நொய்யல் பாதுகாப்பு அமைப்பு இன்று முதல் (07.03.2012) எங்களது பதிவையும் எங்களையும் பதிவுலகில்  இணைத்துள்ளோம்.விரைவில் நொய்யல் தொடர்பான பதிவுகளை வலையேற்றம் செய்ய உள்ளோம்.
 உங்களின் ஆதரவை எதிர் நோக்குகின்றோம்.
 நன்றி..! 


நொய்யல் பாதுகாப்பு அமைப்பு.

Wednesday, 7 March 2012

பல்லடம் தாலுக்காவில் 17 அணைக்கட்டுகள் உள்ளன... 3062 ஏக்கர் பாசனம் பெறுகிறது...

மேலும் பல அணைக்கட்டுகள் தண்ணீரை பெரிய குளங்களுக்கு கொண்டு செல்கிறது...


நீலி அணைக்கட்டிலிருந்து - கால்வாய் - உக்கடம் குளம்
குனியமுத்தூர் அணைக்கட்டிலிருந்து - கால்வாய் - புதுகளம் குளம்
கோயம்புத்தூர் அணைக்கட்டிலிருந்து- கால்வாய் - புதுகளம் குமாரசாமி குளம்
வெள்ளலூர்அணைக்கட்டிலிருந்து- கால்வாய் - வளன்குலம் குளம்
சிங்காநல்லூர் அணைக்கட்டிலிருந்து- கால்வாய் - சிங்காநல்லூர் குளம்
பள்ளபாளையம் அணைக்கட்டிலிருந்து- கால்வாய் - பள்ளபாளையம் & கன்னம்பாளையம் குளம்
சாமளபுரம் அணைக்கட்டிலிருந்து- கால்வாய் - ஆலந்தூர் குளம்
செம்மாண்டம்பாளையம் அணைக்கட்டிலிருந்து- கால்வாய் - செம்மாண்டம்பாளையம் குளம்
மங்கலம் அணைக்கட்டிலிருந்து- கால்வாய் - ஆண்டிபாளையம் குளம்
முதலிபாளையம் அணைக்கட்டிலிருந்து- கால்வாய் - முதலிபாளையம் குளம்

பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்....

 
திருப்பூர் மாவட்டம், ஒரத்துப்பாளையம், மருதுறை, பழையகோட்டை, வெங்கரையம் பாளையம், வெள்ளியம்பாளையம், குட்டப்பளையம், சக்கரபாளையம், கொளந்தபாளையம், சின்ன முத்தூர், போன்ற நொய்யல் ஆற்றோரத்தில் உள்ள ஊர்களில் திருமன வயதில் இருக்கும் கிராமத்து இளைஞர்களுக்கு யாரும் பென்கொடுப்பதில்லை என்று குறை பட்டுக்கொள்கிரார்கள்.......

காரணம் என்ன...?
எல்லாம் இந்த நாசமாப்போன........ நொய்யல் ஆத்து தண்ணிதான் சாமி..., என்கிறார்கள் இந்த கிராமத்து மக்கள்..

கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கிராமத்து மக்களையும், அவர்களின் கால்நடைகளையும், இரத்தமும், சதையுமாக இருந்து வாழ்வித்து கொண்டிருந்த நொய்யல் நதி இன்று இவர்களின் வாயில் நாசமாய் போனதாகிவிட்டது.

காரணம்.... திருப்பூர் சாயப்பட்டறைகள்...

நீதிமன்றம் கடந்து வந்த நொய்யல்

11.02.1998 - Joint Memo Filed in W.P.No.1649/96
26.02.1998 - Order Passed By the Honable High Court In W.p.1649/1996
05.11.2003 - Affidavit Of TNPCB 
05.05.2005 - Appointment Of Expert Committee
10.06.2005 - Reconstitution Of Expert Committee
01.082005 - Appointment Of Monitoring Committee
22.12.2006 - Interim Final Order Passed By the Honable High Court In W.P.No.29791 of 2003
28.04.2008 - Order Passed by the Honable the Honable High Court In W.P.M.P No.811 of 2009 in W.P.No 29791 of 2003
28.04.2008 - Order Passed by the Honable the Honable High Court In W.P.M.P No.812 of 2009 in W.P.No 29791 of 2003
06.10.2009 - Order Passed By the Honable High Court In C.A.No.6776 of 2009
25.01.2010 - Order Passed By the Honable Supreme Court in I.A.Nos.10 & 11/2009 in C.A.No.6776/2009
19.02.2010 - Order Passed By the Honable Supreme Court in I.A.Nos.10 & 12/2009 in C.A.No.6776/2009
28.01.2011 - Order Passed by the Honable High Court in Cont.Petition 1013 & 1068 of 2010 in W.P.No 29791 of 2003
01.01.2011 - 24.05.2011 - Water Readings recorded by PWD at Orathupalayam dam from 01.01.2011 to 24.05.2011

ஒரு நதி எப்படி ஓடக்கூடாது என்பதற்கு உதாரணம் - நொய்யலாறு

நொய்யலாறு, காவிரி நதியின் முக்கியமான துணையாறு ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள வெள்ளியங்கிரி மற்றும் பூண்டி மலைகளில் தோன்றி கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்கள் வழியாக 172 கி.மீ தூரம் ஓடி காவிரி நதியில் கலக்கிறது. நொய்யலாறுக்கு  கொடுவாய் புடி ஓடை, முள்ளரும்பு ஓடை, முடந்துரை ஓடை,இருட்டுபாளையம் ஓடை, சுந்தரம் ஓடை, பாச்சான் வாய்க்கால் மற்றும் காஞ்சிமாநதி என 7 துணை ஓடைகளும் சங்கனூர் பள்ளம் மற்றும் நல்லாறு என 2 துணை ஆறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.நொய்யலாற்று படுகையின் பரப்பளவு சுமார் 3510 ச.கி.மீ, இதில்1752 ச.கி.மீ பரப்பளவு நிலங்கள் விவசாய நிலங்கள் ஆகும்.


 பிற்கால சோழ மன்னர்கள் காலத்தில் நொய்யலாற்று நீரை பாசனத்துக்கு பயன்படுத்த 23 சிறு அணைகள் கட்டியும், 30 குளங்களை வெட்டியும் சிறந்த நீர் பாசன அமைப்பாக மாற்றி கொங்கு மண்டலத்தை செழுமையான பகுதியாக மாற்றினர்.

1891ம் ஆண்டு சின்னமுத்தூரில் நொய்யலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டபட்டது.சின்னமுத்தூரில் இருந்து நீரை ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்திற்கு திருபிவிட்டு அங்கிருந்து கரூர் மாவட்டத்தில் விவசாய தேவைக்காக பயன்படுத்தும்படி திட்டம் நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து 1991ம் ஆண்டு ஒரத்துப்பாளையம் நீர்தேக்கம் கொடுமணல் கிராமத்தில் நொய்யலாற்றின் குறுக்கே கட்டபட்டது.இதன் கொள்ளளவு மில்லியன் கன அடி ஆகும்.

தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர் நகரங்கள் மிக வேகமாக தொழில் வளர்ச்சி அடைந்த நகரங்களாக மாற தொடங்கியது.
1970களில் உள்ளநாட்டு தேவைக்காக பனியன் துணி மூலம் உள்ளாடைகள் தயாரித்த திருப்பூர் நகரம் 1980களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி மையமாக மாறியது. திருப்பூர், பல்லடம், அவினாசி பகுதிகளில் 5000க்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய கம்பனிகள் இயங்கி வருகிறது.கடந்த ஆண்டு திருப்பூர் பனியன் கம்பனிகளில் மொத்த ஏற்றுமதி 12500கோடி ஆகும்.  31.01.2011ம் தேதி சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை தொடர்ந்து 739 சாயப்பட்டறைகள் திருப்பூரில் மூடப்பட்டது. திருப்பூரில் 1941ம் ஆண்டு 2 சாயப்பட்டறைகள் மட்டுமே இயங்கி வந்தது. 1986ல் 99 சாயபட்டரைகளாக அதிகரித்தது, 1990ல் 450 சாயப்பட்டறைகளாகவும், 2001ல் 700 சாயப்பட்டறைகளாகவும் எண்ணிக்கையில் உயர்ந்தது.

குறைந்த அளவு சாயப்பட்டறைகள் இயங்கிய பொழுது ஆற்றுநீர் மாசுபட ஆரம்பித்தது. எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரின் அளவும் அதிகரித்தது. இதனால் திருப்பூருக்கு கிழக்கே உள்ள பகுதிகளில் விவசாயம் மற்றும் சுற்றுச்சுழல் பாதிக்கப்பட்டது. தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற உத்வேகம் சுற்றுச்சுழல் பாதுகாப்பை பின்னுக்கு தள்ளி விட்டது. ஒரு நதி எப்படி ஓடக்கூடாது என்பதற்கு உதரணமாக மாறியது.

 ஒரத்துப்பாளையம் ஆணை நஞ்சை சுமக்கும் நீர் தேக்கமாக மாறியது. ஆதுப்பாளையம் நீர் தேக்கம் செயலிழந்து மூடப்பட்டது. ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ள 95 கிராமங்களிலும், நிலத்தடி நீர் பாதிப்பு காரணமாக 300 கிராமங்களிலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் 1,50,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்படைந்தது. நீர் தேக்கம் மற்றும் குளங்களில் மீன்கள் இறந்து மிதந்தன. கால்நடைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. மக்களுக்கு பெயர் சொல்ல தெரியாத பல நோய்கள் தாக்கப்பட்டு மருத்துவ செலவு செய்து வந்தனர். சுமார் 1,50,000 விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து பிழைப்புக்காக திருப்பூர்,பல்லடம், சென்னிமலை, காங்கயம் மற்றும் கரூர் போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

விவசாய குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு பெண் தருவதில்லை.இதனால் பல இளைஞர்கள் திருமணம் ஆகாத நிலையில் உள்ளனர். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமலும், நிலத்தை விற்க முடியாமலும் தவித்து வருகிறார்கள்.

1998ம் ஆண்டு விவசாயிகள் சார்பாக சாயப்பட்டறை அதிபர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுபடி பொது சுத்திகரிப்பு நிலையங்களில் தொடங்கப்பட்டது. முறையான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் சாயப்பட்டறை அதிபர்கள் சுத்திகரிப்பு செய்யாமலே சாயகழிவு நீரை  நேரடியாக ஆற்றில் கலந்து வந்தனர். இதனால் நொய்யலாறு இறந்த நதியாக காட்சியளிக்கிறது. 2010ம் ஆண்டு தேசிய சுற்றுச்சுழல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்தபோது நீரின் TDS(Total Dissolved Solids mg/1) அளவு 5660 ஆக இருந்தது. இது உலக அளவை அங்கிகரிக்கப்பட்ட அளவான  2000 TDSக்கு மிக அதிகமாக இருந்ததால் 31.O1.2011ம் தேதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் திருப்பூரில் இயங்கி வந்த அணைத்து சாயத்தொழிற்சாலைகளும் மூடப்பட்டது. இதனால் தற்போது TDSன் அளவு 2500 ஆக குறைந்துள்ளது.

 சாயப்பட்டறை அதிபர்கள் Reverse Osmosis  முறையில் கழிவு நீரை சுத்தம் செய்தால் மட்டுமே பனியன் தொழில் தொடர்ச்சியாக இயங்கும், அப்போது தான் விவசாயிகள் நிம்மதியாக விவசாயம் செய்ய முடியும்.

நொய்யல் ஆற்றை மாசுபடுதியதில் முக்கிய பங்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை சார்ந்த வணிக நிறுவனங்களே காரணமாகும்.பல கூடி டாலர்களை லாபம்  ஈட்டியவர்கள் பன்னாட்டு வணிக நிறுவனங்களே ! இதனால் நொய்யல் ஆற்றை சீர்படுத்த பன்னாட்டு வணிக நிறுவனங்ள் தங்கள் லாபத்தின் ஒரு பங்கை செலவு செய்ய வேண்டும். இதற்க்கு மத்திய, மாநில அரசுகள் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 
இயற்கையை நாம் காபற்றினால் தான் இயற்க்கை நம்மை பாதுகாக்கும்..

- திரு.மோகன் தாஸ் அவர்கள் 
01.01.2012 நொய்யல் ஆலோசனை கூட்டத்தில் ஆற்றிய செறிவு மிக்க உரை ...

Tuesday, 6 March 2012

நொய்யல் பாதுகாப்பு அமைப்பு இப்பொழுது பதிவுலகில்..

நொய்யல் பாதுகாப்பு அமைப்பு இன்று முதல் (07.03.2012) எங்களது பதிவையும் எங்களையும் பதிவுலகில்  இணைத்துள்ளோம்.விரைவில் நொய்யல் தொடர்பான பதிவுகளை வலையேற்றம் செய்ய உள்ளோம்.
 உங்களின் ஆதரவை எதிர் நோக்குகின்றோம்.
 நன்றி..! 


நொய்யல் பாதுகாப்பு அமைப்பு.