நொய்யலாறு, காவிரி நதியின் முக்கியமான துணையாறு ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள வெள்ளியங்கிரி மற்றும் பூண்டி மலைகளில் தோன்றி கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்கள் வழியாக 172 கி.மீ தூரம் ஓடி காவிரி நதியில் கலக்கிறது. நொய்யலாறுக்கு கொடுவாய் புடி ஓடை, முள்ளரும்பு ஓடை, முடந்துரை ஓடை,இருட்டுபாளையம் ஓடை, சுந்தரம் ஓடை, பாச்சான் வாய்க்கால் மற்றும் காஞ்சிமாநதி என 7 துணை ஓடைகளும் சங்கனூர் பள்ளம் மற்றும் நல்லாறு என 2 துணை ஆறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.நொய்யலாற்று படுகையின் பரப்பளவு சுமார் 3510 ச.கி.மீ, இதில்1752 ச.கி.மீ பரப்பளவு நிலங்கள் விவசாய நிலங்கள் ஆகும்.
பிற்கால சோழ மன்னர்கள் காலத்தில் நொய்யலாற்று நீரை பாசனத்துக்கு பயன்படுத்த 23 சிறு அணைகள் கட்டியும், 30 குளங்களை வெட்டியும் சிறந்த நீர் பாசன அமைப்பாக மாற்றி கொங்கு மண்டலத்தை செழுமையான பகுதியாக மாற்றினர்.
1891ம் ஆண்டு சின்னமுத்தூரில் நொய்யலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டபட்டது.சின்னமுத்தூரில் இருந்து நீரை ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்திற்கு திருபிவிட்டு அங்கிருந்து கரூர் மாவட்டத்தில் விவசாய தேவைக்காக பயன்படுத்தும்படி திட்டம் நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து 1991ம் ஆண்டு ஒரத்துப்பாளையம் நீர்தேக்கம் கொடுமணல் கிராமத்தில் நொய்யலாற்றின் குறுக்கே கட்டபட்டது.இதன் கொள்ளளவு மில்லியன் கன அடி ஆகும்.
தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர் நகரங்கள் மிக வேகமாக தொழில் வளர்ச்சி அடைந்த நகரங்களாக மாற தொடங்கியது.
1970களில் உள்ளநாட்டு தேவைக்காக பனியன் துணி மூலம் உள்ளாடைகள் தயாரித்த திருப்பூர் நகரம் 1980களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி மையமாக மாறியது. திருப்பூர், பல்லடம், அவினாசி பகுதிகளில் 5000க்கும் அதிகமான சிறிய மற்றும் பெரிய கம்பனிகள் இயங்கி வருகிறது.கடந்த ஆண்டு திருப்பூர் பனியன் கம்பனிகளில் மொத்த ஏற்றுமதி 12500கோடி ஆகும். 31.01.2011ம் தேதி சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை தொடர்ந்து 739 சாயப்பட்டறைகள் திருப்பூரில் மூடப்பட்டது. திருப்பூரில் 1941ம் ஆண்டு 2 சாயப்பட்டறைகள் மட்டுமே இயங்கி வந்தது. 1986ல் 99 சாயபட்டரைகளாக அதிகரித்தது, 1990ல் 450 சாயப்பட்டறைகளாகவும், 2001ல் 700 சாயப்பட்டறைகளாகவும் எண்ணிக்கையில் உயர்ந்தது.
குறைந்த அளவு சாயப்பட்டறைகள் இயங்கிய பொழுது ஆற்றுநீர் மாசுபட ஆரம்பித்தது. எண்ணிக்கை அதிகமாக அதிகமாக அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரின் அளவும் அதிகரித்தது. இதனால் திருப்பூருக்கு கிழக்கே உள்ள பகுதிகளில் விவசாயம் மற்றும் சுற்றுச்சுழல் பாதிக்கப்பட்டது. தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற உத்வேகம் சுற்றுச்சுழல் பாதுகாப்பை பின்னுக்கு தள்ளி விட்டது. ஒரு நதி எப்படி ஓடக்கூடாது என்பதற்கு உதரணமாக மாறியது.
ஒரத்துப்பாளையம் ஆணை நஞ்சை சுமக்கும் நீர் தேக்கமாக மாறியது. ஆதுப்பாளையம் நீர் தேக்கம் செயலிழந்து மூடப்பட்டது. ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ள 95 கிராமங்களிலும், நிலத்தடி நீர் பாதிப்பு காரணமாக 300 கிராமங்களிலும் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் 1,50,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்படைந்தது. நீர் தேக்கம் மற்றும் குளங்களில் மீன்கள் இறந்து மிதந்தன. கால்நடைகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. மக்களுக்கு பெயர் சொல்ல தெரியாத பல நோய்கள் தாக்கப்பட்டு மருத்துவ செலவு செய்து வந்தனர். சுமார் 1,50,000 விவசாய தொழிலாளர்கள் வேலை இழந்து பிழைப்புக்காக திருப்பூர்,பல்லடம், சென்னிமலை, காங்கயம் மற்றும் கரூர் போன்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
விவசாய குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு பெண் தருவதில்லை.இதனால் பல இளைஞர்கள் திருமணம் ஆகாத நிலையில் உள்ளனர். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமலும், நிலத்தை விற்க முடியாமலும் தவித்து வருகிறார்கள்.
1998ம் ஆண்டு விவசாயிகள் சார்பாக சாயப்பட்டறை அதிபர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுபடி பொது சுத்திகரிப்பு நிலையங்களில் தொடங்கப்பட்டது. முறையான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் சாயப்பட்டறை அதிபர்கள் சுத்திகரிப்பு செய்யாமலே சாயகழிவு நீரை நேரடியாக ஆற்றில் கலந்து வந்தனர். இதனால் நொய்யலாறு இறந்த நதியாக காட்சியளிக்கிறது. 2010ம் ஆண்டு தேசிய சுற்றுச்சுழல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்தபோது நீரின் TDS(Total Dissolved Solids mg/1) அளவு 5660 ஆக இருந்தது. இது உலக அளவை அங்கிகரிக்கப்பட்ட அளவான 2000 TDSக்கு மிக அதிகமாக இருந்ததால் 31.O1.2011ம் தேதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் திருப்பூரில் இயங்கி வந்த அணைத்து சாயத்தொழிற்சாலைகளும் மூடப்பட்டது. இதனால் தற்போது TDSன் அளவு 2500 ஆக குறைந்துள்ளது.
சாயப்பட்டறை அதிபர்கள் Reverse Osmosis முறையில் கழிவு நீரை சுத்தம் செய்தால் மட்டுமே பனியன் தொழில் தொடர்ச்சியாக இயங்கும், அப்போது தான் விவசாயிகள் நிம்மதியாக விவசாயம் செய்ய முடியும்.
நொய்யல் ஆற்றை மாசுபடுதியதில் முக்கிய பங்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை சார்ந்த வணிக நிறுவனங்களே காரணமாகும்.பல கூடி டாலர்களை லாபம் ஈட்டியவர்கள் பன்னாட்டு வணிக நிறுவனங்களே ! இதனால் நொய்யல் ஆற்றை சீர்படுத்த பன்னாட்டு வணிக நிறுவனங்ள் தங்கள் லாபத்தின் ஒரு பங்கை செலவு செய்ய வேண்டும். இதற்க்கு மத்திய, மாநில அரசுகள் வேண்டிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இயற்கையை நாம் காபற்றினால் தான் இயற்க்கை நம்மை பாதுகாக்கும்..
- திரு.மோகன் தாஸ் அவர்கள்
01.01.2012 நொய்யல் ஆலோசனை கூட்டத்தில் ஆற்றிய செறிவு மிக்க உரை ...

No comments:
Post a Comment